*சமூக வலைதளங்களில் வைரல்
குடியாத்தம் : குடியாத்தத்தில் புங்கன் மரத்தில் ஊடுருவி ஆலமரம் கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு புங்கன் மரத்தின் மீது ஆலமரம் ஊருருவி நன்கு கம்பீரமாய் வளர்ந்து காணப்படுகிறது. இந்த ஆலமரத்தின் முழு வேர்களும் பூமிக்கு தொடர்பில்லாமல் புங்கன் மரத்தின் மீது மட்டுமே அமைந்துள்ளது.
இந்த தகவல் தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, அந்த மரங்களை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் கிஷோர்குமார் கூறுகையில், காக்கையின் எச்சம் காரணமாக இவ்வாறு வளர்ந்துள்ள இந்த ஆலமரம் தனக்கான முழு சக்தியையும் புங்கன் மரத்தில் இருந்து எடுத்துள்ளது. ஆலமரத்தின் செல்கள் புங்கன் மரத்தின் செல்களுக்குள் இணைந்து மரமாக வளர்ந்துள்ளது. மேலும், ஆலமரத்தின் வேர்கள் பூமிக்குள் ஊடுருவாமல் புங்கன் மரத்துக்குள்ளேயே கலந்துள்ளது. இதுவொரு அரிய தாவரவியல் நிகழ்வு என்றார்.