திருத்தணி: திருத்தணி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காவலர் படுகாயம் அடைந்தார். திருத்தணி அடுத்த டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவர் திருத்தணி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்னைக்காக திருத்தணி காவல் நிலையத்திலிருந்து பாதுகாப்பு பணிக்காக ராஜ்குமார் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் அந்த பணியை முடித்துக் கொண்டு தன்னுடைய பைக்கில் வீட்டை நோக்கி நேற்று வந்துள்ளார்.
கனகம்மாசத்திரம் அடுத்த அருங்குளம் கூட்டு சாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலை தடுமாறி ராஜ்குமார் கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிந்தது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.