Tuesday, September 17, 2024
Home » குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

by Suresh

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் உள்ளன. குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் உள்ளன.

இத்தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியான அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயர் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட ஒரு மாதம் காலம் அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஒரு நாள் கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்றும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இறுதி நாளான இன்று காலை முதல் பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர். அதே நேரத்தில் இத்தேர்வுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

You may also like

Leave a Comment

eleven + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi