சென்னை: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள், அலுவலகத்தில் அல்லது களஆய்வின் போது குறைகேள் அலுவலரிடம் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. குறைகேள் அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளர்களின் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.