கிரகங்களே தெய்வங்களாக அருள்பாலிகின்றன. அதுபோலவே, தெய்வங்களும் கிரகங்களுக்குள் சில தருணம் அடைபட்டுக் கொள்கிறது. அவ்வாறு அடைபட்ட கிரகங்கள் நமக்கும் சில விஷயங்களை அடையாளமாகத் தந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் உணர்வதற்கு தவறிவிடுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். கோயிலுக்குள் உள்ள யந்திரங்களும் மந்திரங்களும் சில கோயிலுக்குள் அதிர்வலைகளை உற்பத்தி செய்கின்றன. அந்த அதிர்வலைகள் கோயிலுக்கு உள்ளேயும் அங்கு வரும் யாவரின் மீதும் கடந்து செல்கின்றன. இதில் உண்டாகும் மாற்றங்கள் எப்பொழுதும் சூட்சமமாக உள்ளது என்பது மனித அறிவிற்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்டது என்றால் அது நிச்சயமாக மிகையில்லை.
அவ்வாறே, மேஷம் ராசிமண்டலத்தின் உகந்த ராசியாக வேலூர் உள்ளதால் இங்குள்ள ஒரு சிறப்பான ஸ்தலமாக திருவல்லம் வில்வநாதீஸ்வரரை காண்போம். இது பாடல் பெற்ற தலமாகும்.அபிஷேகம் செய்வதற்கு தீர்த்தம் கொண்டுவரும் அர்ச்சகரை கஞ்சன் என்பவன் தொல்லை செய்தான். ஆகவே, நந்திதேவன் கஞ்சனை எட்டு பாகங்களாக கிழித்துப்போட்டார். சிவபெருமானின் வரம் பெற்றதால் அவன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டான். எங்கெல்லாம் குருதி விழுந்ததோ அங்கெல்லாம் சிவலிங்கங்கள் உருவாகின எனப் புராணங்கள் சொல்கின்றன. அதன் அடையாளமாக குளக்கரையில் ஏராளமான சிவலிங்கங்களை பார்க்க முடிகிறது. குருதி விழுந்த எட்டு இடங்களில் கோயில்கள் எழுந்தருளி கஞ்சனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வுகள் இன்றளவும் நடக்கிறது. கஞ்சன் திரும்ப வரக்கூடாது என்பதற்காக நந்தி கிழக்குப்பக்கம் அமர்ந்திருக்கும். இந்த தலத்தில்தான் ஒளவைக்கு நெல்லிக்கனி கிடைத்த தனிச்சிறப்பு ஸ்தலமாக உள்ளது.
இந்த கோயிலை சிவானந்த மௌன குரு சித்தர் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தார். இவரே இங்கு ஜீவசமாதியாக உள்ளார்.இந்த தலம் எந்த ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் என்றால், மேஷத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் அமர்ந்த ஜாதகர்களுக்கும்.மேஷத்தில் செவ்வாய், சூரியன் இணைவு பெற்று துலாத்தில் சனி அமர்ந்து மேஷத்தை பார்வை செய்யுமாயின் இவர்களுக்கு கண்டிப்பாக பிரச்னைகள் நிரம்ப இருக்கும். அவர்கள் இத்தலத்திற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமையோ செவ்வாய்க் கிழமையோ சனிக்கிழமையோ வந்து நல்லெண்ணெயால் முலவருக்கு அபிஷேகம் செய்தால் வழக்குகளில் வெற்றி பெறலாம். பல வருடங்கள் நடந்த வழக்குகள் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்குகள் முடிவிற்கும் வரலாம்.
அதுபோலவே, சனி மற்றும் கேது தொடர்பு ஜாதகத்தில் இருந்தால், இத்தலத்திற்கு வந்து பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட விபூதியையும் செந்தாமரையும் சுவாமிக்கு கொடுத்து இங்கு சந்நதிக்கு அருகே 45 நிமிடங்கள் அமர்ந்து தியானித்தால் சனி மற்றும் கேது தோஷங்கள் குறைந்து வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் திருமணத் தடங்கல்கள் இருந்தால் நீங்கி சுபகாரியங்கள் சுபமாக நடந்தேறும்.