கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் ஊராட்சி நடுப்பட்டியைச் சேர்ந்த தேவராஜ்- ரேவதி தம்பதியின் மகன் திருக்குமரன் (15). 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் பேன் பிளக்கை சொருகி திருக்குமரன் ஆன் செய்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு, வெளியே துணி காய வைத்துக் கொண்டிருந்த தாத்தா சீனிவாசன்(65) ஓடி வந்து பேரனை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
உடனே ரேவதி வந்து இருவரையும் காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட தேவராஜ் மெயின் சுவிட்சை ஆப் செய்ததும் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரேவதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மயங்கி கிடந்த தாத்தாவும், பேரனும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர்.