உளுந்து சாகுபடியில் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

 

ஆண்டிபட்டி, ஏப். 24: உளுந்து சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறையுனர் ஆலோசனை வழங்கி உள்ளனர். தேனி மாவட்ட விவசாயிகள் நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் உளுந்து சாகுபடி செய்யலாம். எக்டேருக்கு 20 கிலோ விதையை 30*10 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைகளை துத்தநாக சல்பேட் 100 பிபி.எம் கரைசலில் 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் கரைசல் என்ற அளவில் 3 மணி நேரம் ஊர வைத்து விதைக்க வேண்டும்.

ஊறிய விதைகளை நிழலில் ஆரம்ப ஈர நிலை வரும் உலர வைத்து 1 மாதம் வரை உபயோகிக்கலாம். 1 எக்டேருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட் ரைசோபியம் (பயிறு) உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மாவிரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். எக்டருக்கு 12.5 மெட்ரிக் டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கடைசி உழவுக்கு முன் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.

மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட வேண்டும். பொதுப்பரிந்துரையின்படி இறவை சாகுபடியாளர்கள் எக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்துக்கள் இட வேண்டும். மானாவாரி விவசாயிகள் எக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்துக்கள் இட வேண்டும். மணிச்சத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும். விதைக்கும் முன் கடைசி உழவில் பயறு நுண்ணுரம் எக்டேருக்கு 5 கிலோ இட வேண்டும். விதைத்த 30 மற்றும் 45வது நாட்களில் 2% டி.ஏ.பி கரைசல் இட வேண்டும். பூக்கள் தோன்றும் ஒருமுறையும், 15 நாட்கள் கழித்து மறுமுறையும், என்.ஏ.ஏ 40 பிபிஎம் கரைசலை தெளிக்க வேண்டும்.

இரவையில் எக்டேருக்கு 500 மில்லி புளுகுளோரலின் களைக்கொல்லியை 625 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 3ம் நாள் தெளித்து உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின், 25வது நாள் கைக்களை எடுக்க வேண்டும். மானாவாரி நிலங்களில் 20 மற்றும் 40வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும். உளுந்துக்கு மொத்தமாக 4 அல்லது 5 முறை நீர் பாய்ச்சினால் போதுமானது ஆகும். குறிப்பாக பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் வறட்சியை தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டுமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து