தொடர்ந்து ஒவ்ெவாரு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நகராட்சி பள்ளிகளில் 2,348 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் தமிழ் பாடத்தில் 493 இடங்களும், ஆங்கிலத்தில் 254, கணிதத்தில் 485, அறிவியலில் 728 மற்றும் சமூக அறிவியலில் 388 பணியிடங்கள் உள்ளன.
மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 241 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் பாடவாரியாக, தமிழ் 40, ஆங்கிலம் 44, கணிதம் 59, அறிவியல் 73 மற்றும் சமூக அறிவியல் 25 பணியிடங்களில் ஆசிரியர்கள் இல்லை. குறைந்தபட்சமாக மதுரையில் ஒரே ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, தமிழ் 12, ஆங்கிலம் 3, கணிதம் 13, அறிவியல் 17 மற்றும் சமூக அறிவியல் 4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் 5, தர்மபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.
இதனையடுத்து உபரியாக கண்டறியப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்களுக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். அதனை தொடர்ந்து உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு 19ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 20ம் தேதியும் நடக்கிறது.