ஊட்டி: வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி தமிழக அரசு இ பாஸ் முறையை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதன்மூலம் இங்குள்ள வியாபாரிகளுக்கும் பயன் உள்ளது. ஆனால், நீதிமன்றம் உத்தரவின் பேரில், தமிழக அரசு நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு வருவதற்கு இ பாஸ் முறையை அறிமுகம் செய்தது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இ பாஸ் முறையை அரசு திரும்ப பெற வேண்டும்.
இதனை ரத்து செய்யக் கோரி விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். இ பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல எவ்வித தடையும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல், அவர்கள் சுற்றுலா தொழிலை மேம்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டிலும் சுற்றுலாவை மேம்படுத்த இது போன்று இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும், அரசு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தாமல், அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.