அரசு பஸ்களில் பயணிகளிடம் சில்லறையை கேட்டு நிர்பந்திக்கக்கூடாது: கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை: அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகளிடம் டிக்கெட்டிற்கான கட்டணத்துக்கு சில்லறையாக கொடுக்க வேண்டும் நிர்பந்திக்க கூடாது என போக்குவரத்து துறை நடத்துனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட சுற்றறிக்கை: மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டுமென்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக தெரிவித்து பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடத்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது என்னவெனில், மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்ப்பந்தம் செய்யக்கூடாது.

பயணிகள் பயணிக்கும்போது அவர்களுக்குரிய பயணச்சீட்டினை பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் அனைத்து நேரக்காப்பாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு