வேலூர்: அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த விவகாரம் தொடர்பாக காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாக கடந்த ஆண்டு நடந்த தணிக்கையின்போது தெரிய வந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும், 73 சென்ட் புறம்போக்கு நிலத்தையும் பலருக்கும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதும் தணிக்கையின்போது தெரிய வந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய பத்திரப்பதிவு டிஐஜி சுதாமல்லி, இந்த முறைகேட்டுக்கு காட்பாடி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமார் காரணம் என்பதை கண்டறிந்தார். இவர் 10 நாட்கள் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. டிஐஜி சுதாமல்லியின் விசாரணை அறிக்கை அடிப்படையில் அலுவலக உதவியாளர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவு ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அவர் டிஸ்மிஸ் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறினர்.