அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்து கிண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அன்று இரவே சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கருக்கா வினோத் மீது 9க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால் கிண்டி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையே என்ஐஏ அமைப்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.
அதனைதொடர்ந்து ஓரிரு நாளில் என்ஐஏ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்குவார்கள் என்று சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை கருக்கா வினோத் தொடர்பான தெளிவானசிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளது. இருந்தாலும், ஒன்றிய பாஜ அரசு தனிப்பட்ட அழுத்தம் காரணமாக என்ஐஏ மூலம் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.