ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் என்ஐஏ தனியாக வழக்கு பதிவு: ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து ஓரிரு நாளில் இந்த வழக்கு தொடர்பாக தனது விசாரணையை தொடங்கும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24ம் தேதி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த 9 குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்(42) என்பவர், ‘நீட் மசோத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து’ 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்து கிண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அன்று இரவே சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கருக்கா வினோத் மீது 9க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால் கிண்டி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையே என்ஐஏ அமைப்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.

அதனைதொடர்ந்து ஓரிரு நாளில் என்ஐஏ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்குவார்கள் என்று சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை கருக்கா வினோத் தொடர்பான தெளிவானசிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளது. இருந்தாலும், ஒன்றிய பாஜ அரசு தனிப்பட்ட அழுத்தம் காரணமாக என்ஐஏ மூலம் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related posts

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்