கூட்டாட்சி தத்துவத்தை பற்றி பேசிய நீதிபதி நாகரத்னா, ‘‘மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவைகளை உதாசீனப்படுத்தக் கூடாது. மாநிலங்களை திறனற்றதாகவோ, கீழ்படிந்ததாகவோ கருதக்கூடாது. அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் உணர்வே தாரக மந்திராக இருக்க வேண்டுமே தவிர, பாகுபாடான துவேஷம் அல்ல’’ என்றார். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல குடைச்சல் தரப்படுகிறது. இதுபோன்ற ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. இந்தசூழலில் ஆளுநர்களின் செயல்பாடு குறித்து நீதிபதி நாகரத்னா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது குறித்து கடந்த மார்ச் மாதம் நீதிபதி நாகரத்னா கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார்.