சென்னை: சனாதனத்தில் தீண்டாமை குறித்து தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஜனநாயக படுகொலையை நடத்திப் பார்க்க ஆளுநர் நினைக்கிறார். எனவே ஆளுநரின் பருப்பு தமிழ்நாட்டில் இனி வேகாது. சனாதனம் என்பதே கிடையாது. அவர் தன்னை பிரிட்டிஷ் காலத்து கவர்னர் போல நினைத்து நடந்து கொள்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: சனாதனத்தின் நட்சத்திரம் வள்ளலார் என்று கூறியவர், தற்போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்பதும் சனாதனம் என்று திரிபுவாத கருத்துகளையும் பரப்புகிறார். தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
வேண்டும் என்றே திட்டமிட்டு இது போன்ற அரசியலை அவர் தொடர்ந்து விதைத்து வருகிறார். இந்தப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சமத்துவ முழக்கமாகும். முதுமொழியாகும். அதை சனாதனத்துடன் பொருத்திப் பேசுவது ஏற்புடையதல்ல. சனாதனத்தில் பாகுபாடு இல்லை, தீண்டாமை இல்லை என்று அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார். சனாதனம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ஆளுநர் தயார் என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தயாராக உள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.