எதிர்க்கட்சியினர் போல் செயல்படுவது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நல்லதல்ல : மாஜி முதல்வர் கண்டனம்


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மோடி நினைப்பதை நிறைவேற்ற முடியாத அளவிற்கு நெருக்கடியை கூட்டணிக் கட்சியினர் கொடுக்கிறார்கள். இதனையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத மோடி ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதோடு, அரசுக்கு எதிராக அறிக்கை விடுகிறார். எதிர்க்கட்சி போல ஆளுநர் செயல்படுவது நல்லதல்ல.

தமிழ்நாடு கல்வித்திட்டம் சரியில்லை எனக்கூறி தேசிய கல்வி கொள்கையை கொண்டு வர நினைக்கிறார். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து தான் பல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். நான் கூட தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் கல்வி கற்றவன். நாங்கள் வளர்ச்சியடையவில்லையா. ஆட்சி செய்யவில்லையா. உள்நோக்கத்தோடு ஆளுநர் ரவி செயல்படுகிறார். இது ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு என் வாழ்த்துகள். விஜய் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு செல்வார் என்பது அவருக்கு தான் தெரியும்.
இவ்வாறு கூறினார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை