மதுரை: ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. ஏற்கனவே விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்குவதற்கு சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி இருந்த நிலையில், ஆளுநர் அதற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை எழுப்பி இருந்தனர். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டதால் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று மதுரை வந்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி போராட்டம் நடத்தியது. இதனிடையே, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
இந்நிலையில், ஆளுநர் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உறுப்பினர்களுக்கு சு.வெங்கடேசன் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேராசிரியர்கள் சுரேஷ், சி.ரமேஷ் ராஜுக்கும் சு.வெங்கடேசன் வாழ்த்து கூறினார்.