Monday, July 8, 2024
Home » ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது பெட்ரோல் குண்டு வீசியது ஒருவர்தான்; ஆதாரம் உள்ளது: கவர்னர் புகாருக்கு மறுப்பு தெரிவித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது பெட்ரோல் குண்டு வீசியது ஒருவர்தான்; ஆதாரம் உள்ளது: கவர்னர் புகாருக்கு மறுப்பு தெரிவித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

by Karthik Yash

சென்னை: ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஒருவர்தான். அதற்கான ஆதாரம் உள்ளது என்று ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 25ம் தேதி மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42), தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி, சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டுவந்து அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார்.

கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்திலிருந்து இரண்டு பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் இருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பின்னர், அவர் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைதுசெய்யப்பட்டு. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது குற்றவாளி, 4வது பெருநகர குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நவ.9ம் தேதிவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி வினோத் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சவுத் போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2015 ஆக.12ம் தேதி பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர். அதேபோல் 2017 செப்.13ம் தேதி வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீச முற்பட்ட போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும்.

மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

அதேபோல் 2022 ஏப்ரல் 19ம் தேதி மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொலி ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அப்படி எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை மாநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். ஆளுநருக்கும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

You may also like

Leave a Comment

eight + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi