புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை( விக்சித் பாரத் யாத்திரை) பயனாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று பேசுகையில்,‘‘ நாட்டில் வறுமை குறையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆனால்,அதற்கான வளங்கள் அளிக்கப்பட்டால் அதனை மாற்ற முடியும் என்று ஏழைகள் நிரூபித்துள்ளனர்.வறுமை நிலைமை குறைந்துள்ளது என நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என்ற முன் மாதிரியை ஏற்படுத்தி உலகின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது. இந்த அறிக்கை ஊக்கமளிப்பதாக உள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதே போல் நேர்மையான முயற்சிகள் மற்றும் மக்களின் பங்களிப்பை வலியுறுத்தியதுதான் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையில் இருந்து மீள்வதற்கான காரணம்.
விக்சித் பாரத் யாத்திரை கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தவும், அதிக பயனாளிகளை சேர்க்கும் வாகனங்கள் தங்கள் பகுதிகளுக்கும் வரவேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், ஜனவரி 26ம் தேதிக்கு பின்னரும் இந்த யாத்திரையை நீட்டிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. இரண்டு மாதங்களில் இது ஒரு வெகுஜன இயக்கமாக மாறிவிட்டது. அரசின் நலத்திட்டங்களில் இருந்து யாரும் விடுபட மாட்டார்கள். ஏற்கனவே 80% பஞ்சாயத்துகளை யாத்திரை எட்டியுள்ளது. சுமார் 15 கோடி மக்கள் இதில் இணைந்துள்ளனர். வளர்ச்சிக்கான யாத்திரை இப்போது நம்பிக்கை யாத்திரை ஆக மாறியுள்ளது’’ என்றார்.