டொரான்டோ: கனடாவில் போலீஸ்துறையில் அதிகாரியாக பணிபுரிந்த பால்தேஜ் சிங் தில்லான் அந்த நாட்டின் முதல் தலைப்பாகை அணிந்த சீக்கிய அதிகாரி ஆவார். கடந்த 1985ம் ஆண்டு கனடாவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு வெடித்ததில் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதில் 329 பேர் பலியாயினர். இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவில் தில்லானும் இடம் பெற்றிருந்தார். சமூக சேவையில் ராணி எலிசபெத் 2 மற்றும் டயமண்ட் ஜூபிலி ஆகிய விருதுகளை பெற்றுள்ள அவர் 2016ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவின் தலைவராக தில்லானை கனடா அரசு நியமித்துள்ளது.