சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், டில்லி பாபு முன்னிலை வகித்தனர். தங்கபாலு, விஷ்ணு பிரசாத் எம்பி, பொருளாளர் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வக்கீல் செல்வம், இல.பாஸ்கர் இலக்கிய அணி தலைவர் புத்தன், எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், சுமதி அன்பரசு, மயிலை தரணி, காண்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை நடு வீதியில் நிறுத்த வேண்டும் என்று மோடி கணக்கு போடுகிறார். அவர் எந்த கணக்கு போட்டாலும் இந்திய அளவில் ராகுல்காந்தியும், தமிழக அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பார்கள். எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதை பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக காங்கிரசில் எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.