அரசு மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத உடல்களை தகனம் செய்யக்கோரிய வழக்கில் அரசு அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் முதன்மை அமர்வு உத்தரவு

சென்னை: சென்னை மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கரிய தொண்டு நிறுவனம் தரப்பில், அதன் நிர்வாக இயக்குனர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துவமனை பிணவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் நாளுக்கு நாள் அதிகளவில் தேங்கி வருகிறது. சென்னை அரசு மருத்துவமனையில் மட்டும் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத நிலையில் 100 உடல்கள் ஒரே மாதத்தில் தேங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இதே நிலை உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது. சில உடல் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்து செல்வதாக கூறி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் உடலைகளை அடக்கம் செய்வதற்கு சென்னை போன்ற மாநகர பகுதிகளில் போதிய இடம் இல்லை. தனியார் தொண்டு நிறுவனங்கள் உடலை அடக்கம் செய்ய முன் வந்தாலும் அதற்கான செலவு தொகையை அரசு வழங்குவதில்லை.

மேலும், ஒரே இடத்தில் பல உடல்களை புதைப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை உரிய சட்ட விதிகளை பின்பற்றி உடல்களில் உள்ள அடையாளம், சாட்சி, இறப்பு சான்று, உடற்கூறு சான்று ஆகிவற்றை பெற்று தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான குற்ற ஆவண காப்பகத்தில் பதிவு செய்த பின் உடல்களை புதைக்காமல் தகனம் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

போதை பொருள் விற்ற 17,481 கடைகளுக்கு சீல் ரூ.33.28 கோடி அபராதம்

4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழப்பு ஒரு கோடி ரூபாய் செலவில் மனைவிக்கு மணி மண்டபம்: கணவரின் செயலால் நெகிழ்ச்சி

முதல்வர், எஸ்பிக்கு கொலை மிரட்டல்விடுத்தவர் கைது