அதனால், இறப்பு விகிதத்தில் இருதயநோய் முதல் இடத்தை பிடிக்கிறது. கட்டுப்படுத்தாத சக்கரைநோய், ரத்தகொதிப்பு, ரத்தத்தில்கொழுப்பு, புகைபிடித்தல், அதிக உடல்பருமன், உடல் உழைப்பின்மை ஆகியவை இதயநோய் உண்டாக்கும் காரணிகளாக உள்ளன. இந்த காரணிகளை கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால் இதயநோயினை தடுக்கமுடியும். 2024 இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக இருதய கூட்டமைப்பு இந்த வருட தலைப்பாக இதயத்தை பயன்படுத்தி தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்க என்று அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் முதல்வர் ஜோதிகுமார் தலைமையில் உலக இருதய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. பாலாஜி பாண்டியன் தலைமையில் கண்ணன், ரகோத்தமன், சுரேஷ் குமார், வேல்மாரியப்பன் மேற்பார்வையில் இருதயபிரிவு சார்பாக இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.
அப்போது, அவர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் இது வரை 4500 ஆஞ்சியோ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 950 அஞ்சியோபிளாஸ்ட்டி, 36 பேஸ்மேக்கர் கருவி பொருத்துதல், வேக இருதய துடிப்பிற்கான 10 சிகிச்சைகள், இருதய ஓட்டை அடைக்கும் சிகிச்சைகள் அடங்கும். இவை அனைத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.
இந்த வகை சிகிச்சைகள் தனியார் மருத்துவ மனைகளில் செய்யப்பட்டால் சுமார் 3 முதல் 4 லட்சம் வரை செலவாகும்.மேலும், இருதயப்பிரிவில், தினமும் 200 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 150 எக்கோ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இருதய ஐசியு மற்றும் 30 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் வார்டும் செயல்படுகிறது. மக்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த காலத்தில், காலம் தாழ்த்தாமல் இதயநோய்களுக்கு சிகிச்சை பெற மக்களை அறிவுறுத்துவோம். இதய நோய் வராமல் தடுக்க சர்க்கரைவியாதி, இரத்தகொதிப்பு, இரத்தத்தில் கொழுப்பு ஆகியவைகளை கட்டுப்படுத்துதல் மற்றும் உடல்பருமன் குறைத்தல், புகைபிடிப்பதை தவிர்த்தல், தினமும் சிறிது நேர உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்ற வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்பதை இந்த உலக இருதயதினத்தில் மக்களிடம் வலியுறுத்துவோம்’ என்றனர்.