Sunday, September 8, 2024
Home » அரசு விருந்தினர் மாளிகையை கட்சி ஆபீஸ் போல மாற்றிய இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அரசு விருந்தினர் மாளிகையை கட்சி ஆபீஸ் போல மாற்றிய இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘திடீர்னு சிறுபான்மையின காவலரா தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் சேலம்காரர் அம்பலப்பட்டு போனாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் சேலத்து தலைவர் பாஜவுடன் கூட்டணியில இருந்தப்போ, ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப்பிணைந்து இருந்தால் தான், மக்களுக்கு திட்டங்களை கொண்டு வர முடியுமுன்னு சொல்லி சொல்லியே, சிறுபான்மை மக்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றுவதில் தீவிரமா இருந்தாராம். ஆனா, இப்ப கூட்டணியில் இருந்து முழுசா வெளியே வந்துட்டோமுன்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கிட்டிருக்காரு. ஆனா, முழுசா அவரால் வெளியே வரமுடியலன்னு தேனிக்காரர் கோஷ்டி சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுக்கு ஒரு உதாரணத்தையும் அவங்க சொல்றாங்க. கோவை கருமத்தம்பட்டியில, சமீபத்துல இலைக்கட்சி தலைவர் கிறிஸ்தவ மீட்டிங் ஒன்னு கூட்டியிருக்காரு. அதுல பைபிளில் இருக்கிற ஒரு கதைய, தனக்கேத்த மாதிரி உல்டா செஞ்சு பேசினாராம். அதாவது, கோடீஸ்வர கோமான் ஒருத்தருக்கு 2 பசங்க. அதுல மூத்த மகன் பொறுப்பா, அப்பா வார்த்தைய தட்டாம இருப்பான். ஆனா, இளைய மகனோ எல்லா கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகி, தனக்கு பாகமா கிடைச்ச மொத்த சொத்தையும் அழிச்சிட்டு, சாப்பாட்டுக்கே வழியில்லாம நடுத்தெருவுல நிப்பான். இதை தெரிஞ்சிக்கிட்ட அப்பா, மகன பெருந்தன்மையா மன்னிச்சி, மறுபடியும் பாசத்தோட தன்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போவாரு. இந்த கதைய சொன்ன இலைக்கட்சி தலைவரு, தன்னோட பாணியில இளைய மகன நல்லவனாவும், மூத்த மகன ஊதாரியாவும், கெட்டவனாவும் சித்தரிச்சிருக்காரு. அது மட்டுமில்ல, பொறுப்பான அந்த இளைய மகனா தன்னையும், பொறுப்பில்லாத மூத்த மகனா தேனிக்காரரையும், பாசக்கார அப்பாவா, மலராத கட்சி தலைவரான டெல்லி டாடியையும் சூசகமா குறிப்பிட்டு பேசியிருக்காரு. இப்படி எல்லாம் தேனொழுக பேசறதால மட்டும், சிறுபான்மையின மக்களை ஏமாத்திட முடியாது அப்டின்னு சொல்ற தேனிக்காரர் ஆதரவு கோஷ்டி, எந்த காலத்துலயும் இவரோட வெளி வேஷத்தையும், நடிப்பையும் அவங்க ஏத்துக்க மாட்டாங்கன்னு உறுதியா சொல்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு விருந்தினர் மாளிகை விவகாரம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்ட தலைநகரான நாகருக்கு பெயர்போன ஊரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையை இலை கட்சிக்காரங்க, அவுங்க கட்சி ஆபீஸ் மாதிரியே பயன்படுத்துகிறார்களாம். முதலமைச்சர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய அதிகாரிகள் பயன்பாட்டுக்காக அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த அரசு விருந்தினர் மாளிகையில் சில சமயங்களில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் வந்து தங்கி ஆலோசனை நடத்தி, பிரஸ் மீட்டிங் வைப்பார்கள். ஆனால் சமீப காலமாக கட்சி நிகழ்ச்சியை கூட, இலை கட்சிக்காரங்க அரசு விருந்தினர் மாளிகையில் தான் நடத்துகிறாங்களாம். கட்சியில் புதியவர்களை இணைக்கிறோம் என்ற பெயரில் கடந்த வாரம் 50க்கும் மேற்பட்டவர்களை விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்து, எம்.எல்.ஏ.வான மாவட்ட செயலாளரை சந்திக்க வச்சி இருக்காங்க. அதோடு இல்லாமல், இரு நாட்களுக்கு முன், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தையும் அரசு விருந்தினர் மாளிகையில் அக்கட்சிக்காரங்க நடத்தி இருக்காங்க. இதை பார்த்த கை கட்சிக்காரங்களும், நாங்களும் எங்க எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்து பூத் கமிட்டி கூட்டத்தை அரசு விருந்தினர் மாளிகையில் நடத்த போறோம் என்று சொல்லி இருக்கிறாங்களாம். பூத் கமிட்டி கூட்டம் நடத்தவா அரசு விருந்தினர் மாளிகை இருக்கு என்று இப்போது கேள்வி எழும்பி உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விஜிலென்ஸ்ல அந்த அதிகாரி சீக்கிரம் சிக்கப்போறதா சொல்றாங்களே.. உண்மையா..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘யாரைக் கேக்குற.. பூட்டு மாவட்டத்தின் நாட்டுயர்வுக்குரிய துறையின் அதிகாரியாக இருக்கும் அன்பானவர் பத்தியா.. ஆமா.. அவர் மாட்டப் போறார். தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இடையிலும், மேலிட நெருக்கத்தால் இதே மாவட்டத்தில் பல்வேறு பணி நிலையில் 30 ஆண்டுகள் தொடர்ந்து இந்த அதிகாரி பணியாற்றி வருகிறார். இலைக்கட்சி ஆட்சி காலத்தில் உளறல் மாஜி மந்திரியுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு காரியங்களை நடத்தி வந்தவர், தற்போதும் அந்த பழைய இலைக்கட்சி ஆதரவு ஆட்களை வைத்தே பணியை தொடர்கிறார். மாவட்டத்தின் 1,150 ரேஷன் கடைகளில் இருந்தும் தலா ரூ.500, 13 யூனியன்களில் மாதம் தலா ரூ.3 ஆயிரம் வழங்குமாறு நிர்ப்பந்திக்கிறாராம். மண்ணெண்ணெய் பங்குகளும் தன் பங்கிற்கு ஒரு தொகை தரவும் கோரப்பட்டு முடிந்தவரை வசூல் நடப்பதாகவும், வேண்டியவர்களுக்கென இடமாறுதல் சலுகைகளும் பெற்றுத்தருவது என்பது உள்ளிட்ட புகார்கள் குவிகின்றன. இதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதுடன், விரைவில் இவர் சிக்குவார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். ஆனாலும் வேகம் தணியாமல் இங்கே வசூல் பணி தொடர்கிறதென்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காக்கி துறை சேதி ஏதுமிருக்கா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘முத்து மாவட்டத்தில் காக்கி துறை அதிகாரி ஒருவரை மிஸ்டர் டாக்குமெண்ட் என்ற பட்டத்துடன் தான் அழைக்கின்றனராம். அந்த அளவுக்கு அவர் பிரபலமாம். தமிழ்க்கடவுளின் பெயரைக் கொண்ட அந்த அதிகாரி சிட்டியில் தான் டூட்டி பார்த்து வந்தாராம். மாநிலத்தில் எந்த பகுதியில் டாக்குமென்ட் தொலைந்து போனாலும், அவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் தொலைந்து போனது என்று என்ஓசி கொடுப்பதில் அந்த அதிகாரி கில்லாடியாம். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மூன்று இலக்கங்களுக்கு மேல் என்ஓசி கொடுத்துள்ளாராம் அந்த 2 ஸ்டார். அதற்கு நிலையத்தில் இருக்கும் இரண்டு உயர் அதிகாரிகளும் அவருடன் ஒத்துப் போகின்றனராம். மூவரும் கூட்டு சேர்ந்து கல்லா கட்டி விட்டார்களாம். இதனால் என்ஓசி அதிகாரியை மிஸ்டர் டாக்குமெண்ட் என்ற பெயருடன் தான் அழைக்கிறார்களாம். இந்த விவரம் மாவட்ட எஸ்பிக்கு தெரியவர அவரை வேறு மாவட்டத்திற்கு தூக்கி அடித்தாராம். ஆனால் ரிட்டர்ன் பேக் என்பது போல் அங்கிருந்து மீண்டும் முத்து மாவட்டத்திற்கே வந்து விட்டாராம் மிஸ்டர் டாக்குமெண்ட். அந்த அளவுக்கு செல்வாக்குடன் வலம் வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi