சிவகங்கை, ஏப்.20: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் கொண்டாட்டம், கொண்டாடுதல் முதல் கட்ட நிகழ்வு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டு 10நாட்கள் நடைபெற உள்ளது.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இடஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இருக்கும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விளக்கங்கள் மற்றும் கற்றல் செயல்பாடுகள் சார்ந்த ஐயங்களைப் போக்குதல் மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்திட தயக்கம் காட்டும் பெற்றோர்களின் ஐயத்தைப் போக்கும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் சீதாலெட்சுமி, உதவித் திட்ட அலுவலர் பீட்டர்லெமாயு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், முத்துச்சாமி, சந்திரகுமார், சிவகங்கை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ரூபாராணி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.