கோவை: கோத்தகிரியில் உள்ள கடைவீதிக்குள் புகுந்த கரடி ஒன்று பொதுமக்களை துரத்திய சம்பவம் அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளின் கனக வாழிட மண்டலமாக விளங்கும் நீலகிரியில் வனங்களின் பரப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் கரடி, காட்டு மாடு போன்றவை ஊருக்குள் நுழையும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதியில் இரவு நேரத்தில் புகுந்த கரடி ஒன்று வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் சம்பவம் பொதுமக்களை பீதிக்குள்ளாகி உள்ளது.
பைக்கில் வந்த ஒரு நபர் கரடியிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழையும் கரடிகளை வனப்பகுதிகளுக்குள் நிரந்தரமாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடைவீதிக்குள் புகுந்த கரடி கடந்த ஒரு மாத காலமாக கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. இதனை கூண்டு வைத்து பிடித்து அடர்வனத்துக்குள் கொண்டு போய் விடவேண்டும் என்பது கோத்தகிரி நகர மக்களின் கோரிக்கையாகும்.