வாஷிங்டன்: உலக நாடுகளின் நன்மைக்கு இந்தியா, அமெரிக்கா இடையே நல்லுறவு நிலவுவது மிகவும் முக்கியம் என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பொறுப்பு வகித்து வரும் தரன்ஜித் சிங் சாந்து இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் அடங்கிய குழுவில் தரன்ஜித் சிங் சாந்து உரையாற்றினார்.
அப்போது, “வரும் தலைமுறை அமெரிக்கர்களும் இந்தியாவுடன் இணைந்திருப்பதை, இந்தியாவுக்கு தொடர்ந்து பயணம் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இந்தியா, அமெரிக்கா இடையே நல்லுறவு நிலவுவது, இந்த இருநாடுகளின் நன்மைக்காக மட்டுமல்ல. உலக நாடுகளின் நன்மைக்காகவும் இந்த நல்லுறவு முக்கியம். இங்குள்ளவர்களின் குழந்தைகள் இந்தியாவுக்கு பயணம் செல்கின்றனர். வருங்காலங்களில் அவர்கள் அதிகளவில் இந்தியாவில் முதலீடுகளை செய்ய வேண்டும். இந்தியா செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு ஏதும் பிரச்னைகள் இருந்தால் தூதரகம், துணை தூதரகங்கள் உங்களுக்கு உதவும். இந்தியா, அமெரிக்கா உறவு வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும். அமெரிக்காவில் மேலும் இரண்டு இந்திய துணை தூதரகங்கள் விரைவில் திறக்கப்படும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.