தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற மினி சரக்கு வேனை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த 180 கிலோ தங்க நகை, 250 கிலோ வெள்ளி பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் 180 கிலோ தங்க நகைகள் மற்றும் 250 கிலோ வெள்ளி பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்து, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். அங்கு தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் வியாபாரிடமிருந்து பெங்களூருவுக்கு எந்த நகைக் கடைக்கு செல்கிறது?. அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? என பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.