சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. மீண்டும் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,705க்கும், சவரன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,825க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் வருகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி நேரத்தில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இதை பயன்படுத்தி நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.