சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560க்கும் விற்கப்பட்டது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. கடந்த 4ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,080க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.
அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,820க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால் நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். தொடர்ந்து நாளை திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.