இதனால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் தற்போது தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக கிடுகிடுவென சரிய தொடங்கி உள்ளது. இதற்கு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைய தொடங்கியதும், நேற்று முன்தினம் தாக்கலான ஒன்றிய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பும் தான் காரணம். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, அன்றயை தினம் தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400க்கும் விற்பனையானது.
இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.6,490க்கு விற்பனை ஆனது. அதே போல் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கும், ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ. 6,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.52 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.3,040 வரை தங்கம் குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென சரிந்ததால் நகை கடைகளில் தங்கம் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தற்போதைய இறக்குமதி வரி குறைப்பால் தொடர்ந்து தங்கத்தின் விலை சரியலாம் என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.