பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மூடா மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வர் சித்தராமையாவிடம் மைசூரு லோக்ஆயுக்தா விசாரணை நடத்துமாறு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நேற்று விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சியான பாஜ தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீதான வழக்கு பாஜவின் திட்டமிட்ட சதி. பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபோதும்,
அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாரா? மோடியின் ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் குமாரசாமி, மாநில முதல்வராக இருந்த போது பல்லாரி மாவட்டம் சந்தூர் தாலுகாவில் அரசு நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது. இவ்வழக்கில் அவர் ஜாமீனில் தான் வெளியே இருக்கிறார். அவர் ராஜினாமா செய்தாரா? அவர்கள் பதவி வகிக்கும் போது, என்னை ராஜினாமா செய்ய சொல்ல அவர்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா?. நான் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்றார்.