அம்மன் கோயில் தீமிதி திருவிழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த இரண்டு பக்தர்கள் படுகாயம்

ஆலந்தூர்: அம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது, தீக்குண்டத்தில் தவறி விழுந்த ஆண், பெண் பக்தர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆடி மாதம் 4வது வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடந்தது. அதுபோல, ஆலந்தூரில் பழமையான வேம்புலி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடந்தது. ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, ஆலந்தூர் வேம்புலி அம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் 1500 ஆண், பெண் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து தீக்குண்டத்தில் இறங்கினர்.

அப்போது, குன்றத்தூரை சேர்ந்த அமுதா (42) என்ற பெண் பக்தரும் வேண்டுதலை நிறைவேற்ற தீ குண்டத்தில் இறங்கினார். தீக்குண்டத்தில் நடந்து சென்ற அவர் திடீரென கால் இடறி விழுந்ததில் வலது கால் மற்றும் கைப்பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஆலய உறுப்பினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். வேம்புலி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழா ஏற்பாட்டை ஆலய அறங்காவல் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பெரம்பூர்: கொளத்தூர் பள்ளி சாலை பகுதியில் ஸ்ரீதேவி கங்கை அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிலையில் கொளத்தூர் வடக்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்த வேலு (45) என்ற நபர் தீ மிதித்த போது கால் தவறி நெருப்பில் விழுந்தார். இதில் இடது பக்கம் மார்பு மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி