எந்தச் சூழ்நிலையிலும் இதர மதத்தினர் வணங்கும் கடவுள்களைத் திட்டக்கூடாது என்பது திருக்குர்ஆனின் திட்டவட்டமான கட்டளையாகும். “(முஸ்லிம்களே) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.” (குர்ஆன் 6:108) அநீதிக்கும் அக்கிரமத்துக்கும் எதிராகத்தான் இறை வழியில் போராட வேண்டுமே தவிர வேறு எந்த உலகியல் லாபத்திற்காகவும் இஸ்லாம் போரை அனுமதிக்கவில்லை.“பலவீனமான ஆண்களையும் பெண்களையும் சிறுகுழந்தைகளையும் காப்பதற்காக இறைவனின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் என்ன? (குர்ஆன் 4:75) நீதிக்காக நடத்தப்படும் போராட்டம்தான் போர். ஆகவே அந்தப் போர்க்களத்திலும் கூட எதிரிகள் வழிபடும் தெய்வங்களைத் திட்டக்கூடாது என்பது மிகவும் பொருத்தமான அறிவுரையாகும். போர் என்று வந்துவிட்டால் உடலில் வாளும் ஈட்டியும் பாயும். காயங்கள் ஏற்படும். ஏன் உயிரையே அர்ப்பணிக்கவும் வேண்டி வரலாம். அந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களின் மனங்களைப் புண்படுத்தக்கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. போர்க்களத்திலும் மத நல்லிணக்கத்தைப் பேணச் சொல்கிறது இஸ்லாம்.
– சிராஜுல்ஹஸன்