கடவூர், தோகைமலையில் பயிரிடும் பணி தீவிரம் லட்சத்தை அள்ளும் தக்காளி சாகுபடி விவசாயிகள்

*எப்போதும் இல்லாத அளவிற்கு லாபம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தக்காளி சாகுபடியில் நல்ல மகசூல் பெற்று அதிகமான லாபம் ஈட்டுவது எப்படி என்று முன்னோடி விவசாயிகள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கனிசமாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தக்காளி பழம் என்பது இன்று அனைத்து குடும்பங்களுக்கும் உணவு பொருட்களில் அன்றாட தேவையில் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் போதுமான விளைச்சல் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே தக்காளி சாகுபடியில் நல்ல மகசூல் பெற்று அதிகமான லாபம் ஈட்டுவது எப்படி என்று முன்னோடி விவசாயிகள் ஆலோசனை அளித்து உள்ளனர். ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்து பயன்பெறலாம். ஜுன், ஜுலை, நவம்பர், டிசம்பர், பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். இதேபோல் அக்டோபர், நவம்பர், பிப்ரவரி, மார்ச், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நடவு செய்வதற்கு நல்ல பருவம் ஆகும். தக்காளியில் கோ 1, கோ 2, மருதம் கோ3, பிகேஎம் 1, பூசா ரூபி, பையூர் 1, சிஓஎல்சிஆர் எச் 3 உள்பட பல்வேறு ரகங்கள் உள்ளது.

தக்காளி சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டருக்கு 350 முதல் 400 கிராம் வரை விதைகள் தேவைப்படும். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் உள்ள விவசாய நிலமகவும், மண்ணின் கார அமில தன்மை 6, 0-7 என்ற அளவிலும், வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருந்தால் இதன் வளர்ச்சிக்கு நல்ல உதவியாக இருக்கும். ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.

நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1 மீட்டர் அகலம் உள்ள மேட்டுப்பாத்தியில் 10 சதுர மீட்டர் வரிசை இடைவெளியில் விதைத்த பின்பு மணல் கொண்டு முடிவிட வேண்டும். தொடர்ந்து சாகுபடி செய்யவதற்கு நிலத்தை நன்றாக உழுது பண் படுத்த வேண்டும். உழுத வயலில் பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுகளை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும்.

இதில் ஒரு எக்டருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணி சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ ஆகிய வற்றை அடி உரமாக இடுதல் வேண்டும். நாற்று நட்டு 3 வது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்சி, அதன் பிறகு மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்து 15ம் நாள் ட்ரைகோண்டால் 1 பிபிஎம் என்ற அளவில் பூக்கும் தருவாயில் தெளிக்க வேண்டும். 30ம் நாள் ஒரு கைக் களை எடுத்து 75 கிலோ தழைச்சத்து இட்டு மண் அணைத்தால் நல்ல மகசூலை அதிகரிக்க செய்யலாம். ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து நாற்று நடுவதற்கு முன்பு நிலத்தில் தெளித்து நீர்பாய்ச்சினால் களைகளை கட்டுப்படுத்தலாம்.

தக்காளி செடியை தாக்குவது இலைசுருட்டு நச்சுயிரி நோய் ஆகும். வெண் ஈக்கள் மூலமாக பரவும் நச்சுயிரி நோயானது வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக காணப்படும். இதனால் எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்தோயேட் 500 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் இலைசுருட்டு நச்சுயிரி நோயை கட்டுப்படுத்துலாம். இதேபோல் இலைப்பேன்கள் நோய் என்பது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பபும் காரணியாக செயல்படுகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் எக்டருக்கு 7 கிலோ பயூரடான் குருணையை இட்டு இந்த நோயை கட்டுப்படுத்தாலம்.

மேற்படி ஆலோசனைகளை கடைபிடித்து தக்காளி சாகுபடி செய்தால் 135 நாட்களில் ஒரு எக்டருக்கு 35 டன் பழங்கள் என நல்ல மகசூல் பெற்று அதிகமான லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விலை ஏற்றம் காரணமாக லட்சத்தை வாரி குவித்து வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு லாபத்தை ஈட்டி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி