திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காணாமல்போன 2 ஆடுகளை கண்டுபிடித்து தரும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கார்த்தி (எ) கார்த்திகேயன் (38). இவர் கடம்பத்தூரில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 26ம் தேதி 2 ஆடுகள் காணாமல்போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால் இதுவரையிலும் ஆடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், காணாமல்போன தனது 2 ஆடுகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’’ என்று காணாமல்போன 2 ஆடுகளின் போட்டோக்களுடன் கடம்பத்தூர், பேரம்பாக்கம், தண்டலம், பிஞ்சிவாக்கம், சத்தரை, மப்பேடு மற்றும் கீழச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சுவர்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.