புதுடெல்லி : மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சமூகவலைதள பக்கத்தில் நேற்று பதிவிடுகையில், கோவாவின் கவர்ச்சியானது அதன் இயற்கை அழகு மற்றும் அதன் மாறுபட்ட, இனிமையான மக்களின் அரவணைப்பு, விருந்தோம்பல் ஆகியவற்றில் உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பாஜ ஆட்சியின் கீழ், இந்த நல்லிணக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பாஜ கட்சி வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டி விடுகிறது. முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் கிறிஸ்தவர்களையும் சங்க பரிவார அமைப்புகளையும் தூண்டிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். உயர் மட்டத்தினரின் ஆதரவுடன் இந்தியா முழுவதும், சங்பரிவாரின் இதுபோன்ற நடவடிக்கைகள் தங்கு தடையின்றி தொடர்ந்து நடக்கின்றன.
கோவாவில், பாஜவின் உத்தி தெளிவாக உள்ளது. பசுமை நிலத்தை சட்டவிரோதமாக மாற்றுவதன் மூலமும் சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதன் மூலமும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளை சுரண்டுவது கோவாவின் இயற்கை மற்றும் பாரம்பரியமான மரபுகள் மீது தாக்குதல் நடத்துவது போலாகும் என குறிப்பிட்டுள்ளார்.