கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தேவி தம்பதியின் மகள் ஹரிணி (13) தான் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவியுள்ளார். கடந்த 6 வருடங்களாக நடனம் பயிலும் இவர், 3 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி அதன் மூலம் கிடைத்த பணம் ரூ.15 ஆயிரத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தந்தை பாலமுருகனுடன் திருவனந்தபுரத்திற்கு சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை வழங்கினார். அவரை பினராயி விஜயன் பாராட்டினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிணி உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.