புதுடெல்லி: வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் ஆத்திரம் அடைந்து கூலிப்படையை ஏவி காதலனின் முகத்தை சிதைத்த காதலி கைது செய்யப்பட்டார். டெல்லி நிஹால் விஹார் பகுதியை சேர்ந்தவர் ஓம்கார். வயது 24. கிராபிக் டிசைனர். இவருக்கும் 30 வயது பெண் டிசைனருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஓம்காருக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி தனது காதலன் ஓம்காரை பழிவாங்க துடித்தார். இதன் அடிப்படையில் ₹30 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை சேர்ந்த 5 பேரை ஏற்பாடு செய்தார்.
அவர்களிடம் ஓம்கார் முகத்தில் ஆசிட் வீசி சிதைக்க வேண்டும் என்று கூறி 3 ஆசிட் பாட்டில்களை பெண் டிசைனர் வழங்கினார். கடந்த 19ம் தேதி ேவலை முடிந்து ஓம்கார் வீடு திரும்பும்போது பைக்கில் வந்த 3 பேர் அவர் மீது ஆசிட் வீச முயன்றனர். அது முடியாததால், ஓம்காரின் முகத்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதையடுத்து சிசிடிவி கேமரா, ஓம்கார் செல்போன் அழைப்பு விவரங்கள் அடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த விகாஷ், பாலி, ஹர்ஷ், ரோகன் ஆகியோர் 23ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது ஓம்காரின் காதலிதான் இதை ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பெண் கிராபிக் டிசைனரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் அவனது முகத்தை ஆசிட் வீசி சிதைக்க விரும்பினேன். ஆனால் ஆசிட் வீச முடியாததால் கத்தியால் பலமுறை குத்தி சிதைக்க சொன்னேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.