இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அடிக்கடி சீரழிப்பு: 50 சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது

* கூல்டிரிங்ஸில் கருக்கலைப்பு மாத்திரை
* விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

திருமலை: 50 சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அடிக்கடி சீரழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கூல்டிரிங்ஸில் கருக்கலைப்பு மாத்திரைகளை கலந்து கொடுத்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் பிரதீப்(35). இவர், ஏற்கனவே தான் பணிபுரிந்த பகுதிகளில் உள்ள சிறுமிகளிடம் நட்பாக பழகி, நைசாக பேசி அவர்களை தனிமையில் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்படும் சிறுமிகள் நடந்த சம்பவம் வெளியே தெரிந்தால் தனக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அவமானம் எனக்கருதி புகார் தராமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத் ராஜேந்திரா நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் பழகினார். ஒருநாள், அவரை தனிமையில் வரவழைத்து திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் செய்துள்ளார். வழக்கம்போல் இதையும் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்துள்ளார். அதன்பிறகு அந்த சிறுமியை அடிக்கடி தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு பிரதீப் அழைத்துள்ளார். ஆனால் சிறுமி ஏற்க மறுத்துள்ளார். அப்போது, தான் ரகசியமாக எடுத்த பலாத்கார வீடியோ மற்றும் போட்டோக்களை சிறுமியின் வாட்ஸ் அப்பில் அனுப்பி, நான் அழைக்கும்போது வர வேண்டும். இல்லாவிட்டால் இவற்றை இணையதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த சிறுமி, பிரதீப்புடன் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது கருத்தரிக்காமல் இருப்பதற்காக சிறுமிக்கு மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் சிறுமிக்கு உடல்நலம் பாதித்தது. இதுதொடர்பாக பெற்றோர் கேட்டபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த 26ம் தேதி ராஜேந்திரா நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான போலீஸ்காரர் பிரதீப் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. அவர்களையும் பிரதீப் மிரட்டி பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் பலாத்காரம் செய்யப்படும் சிறுமிகளுக்கு கூல்டிரிங்ஸில் கருத்தடை மாத்திரைகளை கலந்துகொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து போலீஸ்காரர் பிரதீப்பை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!