Monday, July 1, 2024
Home » முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட, ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியாவுக்கு வீடு கட்ட, ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!

by Porselvi

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (30.06.2023) தலைமைச் செயலகத்தில், அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையினையும் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த திரு.ஸ்டீபன்ராஜ் – திருமதி சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து முதலமைச்சர் அவர்கள் அறிந்தவுடன், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் 8.2.2023 அன்று இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.அதன் தொடர்ச்சியாக சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்க்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு.சா.மு. நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உள்ளனர்.

You may also like

Leave a Comment

5 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi