Sunday, June 30, 2024
Home » நிவாரணம் கிடைக்கும்

நிவாரணம் கிடைக்கும்

by Ranjith

தமிழகம் உள்பட ஆட்சி செய்யாத மாநிலங்களை தொடர்ந்து வஞ்சிப்பதிலேயே குறியாக இருக்கிறது ஒன்றிய பாஜ அரசு. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்துக்கு தேவையான நலத்திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 2015ல் அறிவித்து, 2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது வரை கட்டுமான பணிகளே துவங்காத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதற்கு முதன்மை சாட்சி. அதுமட்டுமா? கடந்த டிச. 3 மற்றும் 4ம் தேதிகளில், மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேய் மழை கொட்டியது.

இதனால் 4 மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகளோடு, மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.  அடுத்த 2 வாரங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாதிப்படைந்த பகுதிகளில் தமிழக அரசு மீட்பு பணிகளை உடனடியாக முடுக்கி விட்டது. இதையடுத்தே மக்கள் விரைவிலேயே வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வந்தனர். வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.37,907 கோடி நிவாரணம் வேண்டும்.

தேசிய பேரிடராகவும் அறிவிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து கோரியிருந்தார். தமிழக எம்பிக்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டிருந்தனர். சேதமடைந்த பகுதிகளை ஒன்றிய அரசு குழுவினரும் பார்வையிட்டு, அதிகளவு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர். ஆனாலும், தமிழக அரசு கேட்ட நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. மாநில அரசு கேட்டதும் நிதி ஒதுக்க நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா’ என்று கூறியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை துயரக்கடலில் தள்ளியது. இந்த சூழலில் தமிழக அரசு வெள்ள நிவாரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தேவையான வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. இது பேரிடர் மீட்பு கொள்கை விதிகளை திட்டமிட்டு மீறும் செயல்.

எனவே, தமிழ்நாட்டுக்கு தேவையான வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்கவும், முதற்கட்டமாக இடைக்கால அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை ஒன்றிய அரசு விரைந்து உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே, பாஜ அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்த உச்ச நீதிமன்றம், 24 மணிநேரம் கெடு விதித்து பதவி பிரமாணம் செய்து வைக்க உத்தரவிட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது. ஒரு மாநில அரசுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் முக்கிய கடமை. நலத்திட்டங்களில் புறக்கணிப்பு, பல ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்பட தமிழகம் பல வழிகளில் ஒன்றிய பாஜ அரசால் வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கான உரிமையை கூட, நீதிமன்ற கதவுகளை தட்டியே பெற வேண்டி உள்ளது. அந்த வகையில், வெள்ள நிவாரண வழக்கிலும் நமக்கான நிவாரணம் கட்டாயம் கிடைக்குமென நம்புவோம்.

You may also like

Leave a Comment

sixteen + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi