இறைமக்களே, சவால்களையும், விமர்சனங்களையும் எதிர்கொள்வது ஒரு கலை. இத்தகைய கலையை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வது அவசியமானதாகும். இத்தகைய விமர்சனங்களை தாங்கிகொள்ள பெலனின்றி சிலர் தற்கொலை வரை சென்று விடுகின்றனர்.உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம்.
ஏன் என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும். உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவீட்டீர்கள் என்று கருதவேண்டும். விமர்சனம் என்பது சில நேரங்களில் விமர்சிப்பவரின் இயலாமையை காட்டும். அவரால் முடியாததை நீங்கள் செய்து முடிக்கும்போது நீங்கள் அவரது விமர்சனத்துக்குள்ளாவீர்கள். மற்றவர்களை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பார்கள். உங்களை நோக்கி வரும் விமர்சனத்தை நீங்கள் எதிர்கொள்வதும், ஜீரணித்துக்கொள்வதும், பதிலளிப்பதும் ஒரு கலை.‘‘உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்’’ (1 பேதுரு 3:15) என்றும் ‘‘மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே?’’ (நீதி.26:4) என்றும் வேதம் கூறுகிறது. ஆகவே எங்கே பேச வேண்டுமோ அங்கே மட்டும் பேசுங்கள்.
– அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.