சென்னை: ஜெர்மனி நாட்டில் உலக அளவிலான உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் வரை 6ஆம் தேதி வரை நடைபெற்றது. உலகளவில் 26 நாடுகளைச் சேர்ந்த 700 உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 29 உயரம் குறைந்த மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 7 உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு வீரர்கள் இப்போட்டிக்கு செல்வதற்கான விமானக் கட்டணம், நுழைவுக் கட்டணம், உணவு, தங்குமிட வசதி மற்றும் இதர செலவுகளுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 2 லட்சத்து 49 ஆயிரம் வீதம் நிதியினை வழங்கி, தன்னம்பிக்கையுடன் சென்று வெற்றி வாகை சூடி, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
இப்போட்டிகளில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் அவர்கள் குண்டு. வட்டு, ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கமும். அச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் அவர்கள் குண்டு எறிதலில் தங்கமும். வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும், புதுக்கோட்டை மாவட்டம், கோனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் அவர்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கமும், ஒடுகாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒற்றையர் பிரிவு பேட்மின்டனில் தங்கப்பதக்கமும். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா அவர்கள் 60 மீட்டர், 100 மீட்டர், வட்டு எறிதலில் 3 வெள்ளிப் பதக்கமும், இன்பத்தமிழி அவர்கள் மீட்டர், வட்டு எறிதலில் 3 வெள்ளிப் பதக்கமும், 60 மீட்டர், 100 மீட்டரில் 2 வெண்கலப் பதக்கமும், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த நளினி அவர்கள் குண்டு, வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் மற்றும் இரட்டையர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் முக்கியமான இப்போட்டியில் பதக்கங்கள் வென்ற 7 உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் இன்று (08.08.2023) சென்னை முகாம் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க செயலாளர் கிருபாகர ராஜா, பொருளாளர் விஜய் சாரதி, துணைச் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.