இந்தாண்டு அழகர்கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க கோ.வேலங்குடியைச் சேர்ந்த நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் நேற்று முன்தினம் புறப்பட்டு நேற்று மேலூர் வந்தடைந்தனர். இவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் அழகர்கோயில் சென்றடைகின்றனர். அங்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு ராக்காயி அம்மன் கோயிலில் தீர்த்தமாடி விட்டு கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பசுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
நாளை 100க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விருந்து உபசரிப்பு செய்கின்றனர். வேலங்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அழகர்கோயிலில் நடக்கும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியமாக மாட்டுவண்டி கட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். நாளை மறுதினம் (21) தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புகின்றனர். இந்த பாரம்பரியம் நான்கு தலைமுறையாக தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.