டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியில் எந்த தேர்தலும் நேர்மையாக நடைபெறாது என முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி குற்றம்சாட்டி உள்ளது. எனவே பொதுதேர்தலை நியாயமாக நடத்த ஏதுவாக ஷேக் ஹசீனா பதவி விலகி, இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பங்களாதேஷ் தேசியவாத கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது ஆளும் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினர், கட்சி சார்பற்ற காபந்து அரசாங்கத்தின்கீழ் தேர்தலை நடத்த வலியுறுத்தினர். மேலும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்பட தடுப்பு காவலில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.