ஜபாலியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ராஹிம் பியரி மரணம் அடைந்துள்ளார். அகதிகள் முகாமில் குழந்தைகள் உட்பட உயிரிழந்த பலரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட உடல்களை கண்டு உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கடந்த சில நாட்களாக தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்கிய லெபனான் நாட்டுக்குள்ளும் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே மேற்கு கரையில் இருந்த ஹமாஸ் தலைவர் ஒருவரின் வீட்டை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடி வைத்து தகர்த்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் தங்கள் குடிமக்களை பாதுகாப்பதற்காக யுத்தம் நடத்துவதாக ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, நிதியையும் வாரி வழங்குகிறது. இஸ்ரேலுக்கு நிதி வழங்குவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இருந்த போது, போருக்கு எதிரான போராட்டக் காரர்கள் திடீரென அவைக்குள் புகுந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவைக் காவலர்கள் போராட்டக் காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.