கான்யூனிஸ்: காஸாவில் உள்ள ஹமாஸ் படைக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில்,37,800 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தும் போது, அங்கு உள்ள மிக பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகள் மறைந்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தினர் சந்தேகத்தினர். இதையடுத்து ஷிபா மருத்துவமனைக்குள் ராணுவம் புகுந்தது. மருத்துவமனை கட்டிடத்துக்கு அடியில் சுரங்க பாதை இருப்பதை கண்டுபிடித்த ராணுவம் அது குறித்த வீடியோவை வெளியிட்டது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ராணுவம் வெளியேற்றியது. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஷிபா மருத்துவமனையில் நடந்த சோதனையின் போது மருத்துவமனையின் இயக்குனர் முகமது அல் செல்மியாவை ராணுவம் கைது செய்து இஸ்ரேலுக்கு கொண்டு சென்றது. 7 மாதங்களுக்கு பின்னர் அபு செல்மியாவை இஸ்ரேல் நேற்று விடுதலை செய்தது. அபு செல்மியா,‘‘இஸ்ரேல் சிறையில் உள்ள அதிகாரிகள் என்னையும் இதர பாலஸ்தீனர்களையும் கொடுமைப்படுத்தினர். என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. வக்கீல்களை சந்திக்கவும் அனுமதிக்கப்படவில்லை’’ என்றார்.