ராம்நகர் மாவட்டம், பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலை உட்பட நகரின் அனைத்து சாலையும் குப்பை குவியல்களாக உள்ளது. நகரில் தினமும் 30 முதல் 50 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்த அளவு கழிவுகளை அகற்ற முறையான ஏற்பாடுகளை செய்யாத மாநகரசபை குப்பைகளை ஆங்காங்கே கொட்டி வருகிறது. மழைக்காலம் துவங்கியுள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குப்பை குவியல்கள் பெரும்பாலும் வாய்க்காலின் ஓரத்தில் கொட்டப்படுவதால் வாய்க்கால் குப்பை நிரம்பி உள்ளது என குற்றம்சாட்டினர். நகரத்தில் உருவாகும் குப்பைகளை அகற்ற தாலுகாவில் உள்ள கன்வா கிராமத்திற்கு அருகில் ஒரு இடத்தை நகராட்சி கவுன்சில் கண்டறிந்தது. ஆனால், குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. ஏலேக்கேரி அருகே கும்பரகுண்டி பகுதியில் தற்போது குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.