கஞ்சா போதையில் அட்டூழியம் இளம்பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை: 3 ரவுடிகள் கைது

திருமலை: இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஈப்புருபாலத்தை சேர்ந்தவர் சுசரிதா(21). இவர் இன்டர்ஷிப் படித்து முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில்தேடினர். அப்போது அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுவரை ஒட்டிய முட்புதரில் சுசரிதா அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்தார். மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்து. உடல் முழுவதும் பலத்த காயம் காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், சுசரிதா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் சந்திரபாபுநாயுடு உடனடியாக உள்துறை அமைச்சர் அனிதாவை சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவிட்டார். அதன்பேரில் சென்ற உள்துறை அமைச்சர், சுசரிதா சடலத்தை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், முதல்வர் உத்தரவின்பேரில் இந்த வழக்கை எஸ்பி தலைமையிலான 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், சுசரிதா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவுடிகளான தேவரகொண்டா விஜய், தேவரகொண்டா காந்த் மற்றும் அவர்களது கூட்டாளியான கரங்கி மகேஷ் ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை தேடி வந்த போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விஜய், காந்த், கரங்கி மகேஷ் ஆகிய 3 பேரும், சம்பவம் நடந்த இடத்தில் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற சுசரிதாவை கடத்திசென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கொலை செய்து முள்புதரில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கைதான 3பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் 3 ரவுடிகள் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை