அண்ணாநகர்: முகப்பேர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார் நேற்று அதிகாலை மேற்கண்ட பகுதிகளில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, முகப்பேரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பது தெரிந்தது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த செல்வ விநாயகம் (54), அவரது மகன் சதீஷ்குமார் (24) ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றது தெரிந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.